ஆன்மிகம்
திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி கோவில்

திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி கோவில் பொங்கல் திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-03-20 08:34 GMT   |   Update On 2021-03-20 08:34 GMT
திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி கோவில் பொங்கல் விழா இன்று தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு 26-ந்தேதி நடக்கிறது.
கேரளாவில், 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களில் ஒன்றாக திருவனந்தபுரத்தில் உள்ள கரிக்ககம் சாமுண்டி கோவில் விளங்கி வருகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. மன்னர்கள் ஆண்ட காலம் முதல் இன்று வரையும் சத்தியத்துக்கு சாட்சியாக விளங்கி வருகிறது.

இந்த கோவிலில் பல வழக்குகள் சத்தியம் செய்வதன் மூலம் உண்மை நிரூபிக்கப்பட்டு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. குற்றவாளியும், குற்றம் சாட்டியவரும் கோவில் குளத்தில் நீராடி சாமுண்டி தேவிக்கு காணிக்கை செலுத்தி, விளக்கேற்றி தீபத்தின் மீது சத்தியம் செய்வார்கள். பொய் சத்தியம் செய்பவர்கள் சாமுண்டியால் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதால், யாரும் பொய்யான சத்தியத்தை கூற முன்வருவதில்லை.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்குரிய கரிக்ககம் சாமுண்டி கோவிலின் பொங்கல் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதைெயாட்டி இன்று மாலை 5 மணிக்கு குருபூஜையுடன் விழா தொடங்குகிறது.

விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.20 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியுணர்த்தல், நிர்மால்ய தரிசனம், சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், எதிர்த்த பூஜை, பந்தீரடி பூஜை மற்றும் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள், கலைநிகழ்ச்சிகள், இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

விழாவில் 25-ந்தேதி மாலை 5 மணிக்கு தங்க ரதத்தில் தேவி ஊர்வலம், 26-ந்தேதி காலை 10.15 மணிக்கு பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு, பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்யம், இரவு அத்தாள பூஜை, குருசி சமர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில் வளாகம் மற்றும் பொது இடங்களில் பொங்கல் படைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

விழாவையொட்டி கரிக்ககம் சாமுண்டி கோவில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் கரிக்ககத்தம்மா விருது இந்த ஆண்டு பிரபல மலையாள கவிஞர் வி.மதுசூதனன் நாயருக்கு வழங்கப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News