ஆன்மிகம்
சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்ட கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

Published On 2021-04-02 03:06 GMT   |   Update On 2021-04-02 03:06 GMT
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், பெரிய வியாழனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலமாக விளங்கும் இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்துள்ளதால் மேலும் சிறப்புடன் விளங்குகிறது.

உலக மக்களின் பாவங்களுக்காக 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். ஏசு சிலுவையில் உயிர் விட்ட நாள் ‘புனிதவெள்ளி' ஆகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தவக்காலம் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ெஜபம், மன்றாட்டு, திருப்பலி போன்றவை நடந்து வந்தது. கடந்த 28-ந் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

ஏசு சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக உள்ளதுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்றார். இந்த நாளே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை நினைவுகூரும் வகையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆண்டு தோறும் பெரிய வியாழன் நிகழ்ச்சியில் பங்குத்தந்தையர்கள், சீடர்களின் பாதத்தை கழுவி முத்தமிடுவது வழக்கம்.

ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதை தொடர்ந்து திவ்யநற்கருணை வழங்கப்பட்டது.

இன்று(வெள்ளிக்கிழமை) பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவைகள் கலையரங்கில் நடைபெறுகிறது.

பின்னர் ஏசுவின் உருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பேராலய மேல் கோவிலுக்கு பவனியாக எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.. 4-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Tags:    

Similar News