செய்திகள்
சத்யபிரதா சாகு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாள் சிறப்பு முகாம் - தலைமை தேர்தல் அதிகாரி

Published On 2021-10-28 23:30 GMT   |   Update On 2021-10-28 23:30 GMT
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியத் தேர்தல் ஆணையம் 1.1.2022-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் 29-ம் தேதி (இன்று) ஆலோசனை நடக்கிறது.

இந்த கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது படிவங்களின் மீது தீர்வு காண்பது குறித்து தெரிவிக்கப்படும். அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பரிசீலிக்கப்படும்.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும். கோரிக்கை மற்றும் மறுப்புரைகளை நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம். அவர்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் போன்றவற்றுக்கு உதவி செய்யலாம்.

வாக்குச்சாவடி முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் தரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News