தமிழக அரசும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி பிரச்சனையில் சுமூக தீர்வு காண வேண்டும் - குமாரசாமி
திருமலை:
திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று இரவு திருமலைக்கு வந்தார். இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி நடந்த சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்தில் பங்கேற்று குமாரசாமி சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்தம், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மக்களும் தமிழர்களும் எதிரிகள் அல்ல. அவர்கள் சகோதரத்துவத்துடன் உள்ளனர். இயற்கை ஒத்துழைக்காததால் மழை இல்லாத காரணத்தினால் மட்டுமே கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் அனுப்ப முடியாமல் உள்ளது.
இதனால் பிரச்சனை தொடர்ந்து வருகிறது இதனை பல்வேறு கட்சிகள் அரசியல் ஆக்குவதால் பிரச்சனை தொடங்குகிறது. இரு மாநில அரசும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் காவிரி பிரச்சனையில் சுமூகமான தீர்வை காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #CauveryIssue