செய்திகள்
ராமகிருஷ்ணன்

கோவில்பட்டியில் வாகனம் மோதி அய்யப்ப பக்தர் பலி

Published On 2021-01-11 14:40 GMT   |   Update On 2021-01-11 14:40 GMT
கோவில்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அய்யப்ப பக்தர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கோவில்பட்டி:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா எ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65) விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சுப்பிரமணியன் (65).

இவர்கள் 2 பேரும் ஆண்டு தோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல பாஸ் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதம் இருக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் ஊரில் இருந்து பாத யாத்திரையாக புறப்பட்டனர்.

நேற்று காலை 6 மணி அளவில் கோவில்பட்டி பகுதியில் 2 பேரும் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் 2 பேர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுப்பிரமணியன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த சுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் பலியான ராமகிருஷ்ணன் உடலை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான ராமகிருஷ்ணனுக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், கேசவன் என்ற மகனும் உள்ளனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி அய்யப்ப பக்தர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News