கோவை மாநகரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற 4 வாலிபர்கள் கைது
கோவை:
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் ஆசிரியர் காலனி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த சவுரிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற பூசாரி மணி (வயது 23), மசக்காளிபாளையத்தை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் (25) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 3¾ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல சரவணம்பட்டி போலீசாருக்கு துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த சிங்காநல்லூரை சேர்ந்த அர்ஜூன் (23), உப்பிலிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (25) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய செல்வபுரத்தை சேர்ந்த பூவேந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.