செய்திகள்
சாலை மறியல்

நாட்டறம்பள்ளி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-11-23 15:18 GMT   |   Update On 2021-11-23 15:18 GMT
நாட்டறம்பள்ளி அருகே பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் கிழக்கு மேடு அருகே சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி ஊராட்சி கிழக்கு மேடு பகுதியில் கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பி மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தற்காலிகமாக பள்ளங்கள் எடுத்து மழைநீரை வெளியேற்றினர். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனை நேற்று வரை சரி செய்யவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் கிழக்கு மேடு அருகே சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் அளித்த உறுதி மொழியை ஏற்று சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News