செய்திகள்
ஓபசமுத்திரம் கிராமத்தில் சீரான குடிதண்ணீர் வசதி கோரி பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட காட்சி.

கும்மிடிப்பூண்டி அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

Published On 2021-08-25 09:12 GMT   |   Update On 2021-08-25 09:12 GMT
கும்மிடிப்பூண்டி அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது ஓபசமுத்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஓபசமுத்திரம் கிராமத்தில் உள்ள மண்ணடி தெரு உள்பட்ட 2 தெருக்களில் மொத்தம் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தால் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் இந்த பகுதி மக்கள் ஏற்கனவே பல முறை புகார் மனு அளித்துள்ளனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக அந்த வழியாக சென்னை செங்குன்றம் நோக்கி சென்ற அரசு பஸ்சையும் அவர்கள் சிறை பிடித்தனர்.

அந்த பஸ்சில் சிகிச்சைக்காக நோயாளிகள் பலர் ஆஸ்பத்திரிக்கு சென்றதால் சிறை பிடித்த பஸ்சை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு உடனடியாக விடுவித்தனர். இருப்பினும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வாசுதேவன், நடராஜன் மற்றும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது சீரான மின்சாரத்திற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டிருப்பதால் தண்ணீர் தட்டுபாடு என்கிற பிரச்சினையே வராது. மேலும், பழைய மேல் நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிக்கு பதில் புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஒரிரு நாளில் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் தெரிவித்தார்.

இதையடுத்து தங்களது 1 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News