செய்திகள்
க்ரைம்.

நூல் விற்பனை முகவர் கடத்தல் - கும்பலுக்கு தனிப்படை வலைவீச்சு

Published On 2021-10-11 08:09 GMT   |   Update On 2021-10-11 08:09 GMT
செல்வராஜ் நூல்களை வாங்கி விற்கும் முகவராக செயல்பட்டு வந்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் போயம்பாளையம் அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 64). நூல் விற்பனை முகவர். சம்பவத்தன்று வீட்டு அருகே செல்வராஜ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வராஜூடன் திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அந்த கும்பல் செல்வராஜை காரில் ஏற்றி கடத்தி சென்றது. 

இதுகுறித்து செல்வராஜ் மகன் குரு பிரசாத் அளித்த புகாரின் பேரில்  அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் செல்வராஜ் நூல்களை வாங்கி விற்கும் முகவராக செயல்பட்டு வந்துள்ளார். அப்படி கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஒரு தரப்பிடம் இருந்து ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கு நூல் வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த பிரச்சினையில் 4 பேர் கும்பல் செல்வராஜை கடத்தி சென்றுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து செல்வராஜை கடத்தி சென்ற கும்பல் யார்? அவர்கள் செல்வராஜை எங்கு கடத்தி வைத்துள்ளனர் என்று பல்வேறு கோணங்களில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். 

மேலும் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் செல்வராஜை மீட்டு விடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  
Tags:    

Similar News