செய்திகள்
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி எம்பி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்காளர் சந்தானகுமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார்.
இதற்கிடையே சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கனிமொழி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது இருதரப்பு வக்கீல்களும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று இவ்வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி மனு மீதான தீர்ப்பை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வழங்குவதாக அறிவித்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கனிமொழி எம்.பி.யின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், வாக்காளர் சந்தானகுமார் தொர்ந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறும்.