செய்திகள்
மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் சிவன்அருள் தகவல்
மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து, மீனவ மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் 2020-21ன் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் மானியம் பெற மீனவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் பண்ணை குட்டை அமைத்து மரபணு மேம்படுத்தப்பட்ட ‘கிப்ட் திலேப்பியா’ மீன் வளர்ப்பு செய்வதற்காக பண்ணைக்குட்டை அமைத்தல், மீன் குஞ்சுகள், தீவனம் மற்றும் சுற்று வேலி அமைத்தல் ஆகிய செலவினங்களுக்கு மீன்வளத்துறை மூலம் மானியம் 40 சதவீதம் வழங்கப்படுகிறது.
அதில் ஒரு அலகிற்கு அதிகபட்சம் ரூ.99,000 செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.39,600 வரை மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த ஒரு வார காலத்துக்குள் முகவரி எண்:16, 5-வது குறுக்கு தெரு, காந்திநகர் காட்பாடி, வேலூர் என்ற விலாசத்தில் செயல்பட்டு வரும் வேலூர் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொலைப்பேசியிலோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களை பெற்று பயன் அடைய கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பங்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே மீன் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.