செய்திகள்
மயிலாடுதுறை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
மயிலாடுதுறை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் கீழத்தெருவை சேர்ந்த திருஞானசம்பந்தமூர்த்தி மனைவி சரண்யா (வயது 27). இவர் குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் கதவு திறந்திருந்த கொள்ளைபுறம் வழியாக மர்மநபர் வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த சரண்யாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதில் அதிர்ச்சி அடைந்த சரண்யா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மர்ம நபரை துரத்தி சென்றனர். ஆனால் மர்மநபரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.