செய்திகள்
புல்வாமா தாக்குதல்

’புல்வாமா தாக்குதல் இம்ரான்கான் அரசின் மிகப்பெரிய சாதனை’ - பாகிஸ்தான் மந்திரி பேச்சு

Published On 2020-10-29 14:24 GMT   |   Update On 2020-10-29 14:24 GMT
புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் மந்திரி பவாத் சௌதி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுச்சாலையில் சென்றுகொண்டிருந்த ராணுவ வாகனங்களை குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்க்தல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து இந்திய விமானப்படை அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் இந்த தாக்குதலால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மறுநாள் (2019 பிப்ரவரி 27) காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றது. உடனே பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது பாகிஸ்தான் எப்-16 வகை போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் அபிநந்தன் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். ஆனால், காற்றின் வேகம் காரணமாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த அவரை போர் கைதியாக பாகிஸ்தான் சிறை பிடித்தது.

ஆனால், இந்தியாவின் எச்சரிக்கை மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக அபிநந்தனை மார்ச் 1-ந்தேதி பாகிஸ்தான் விடுதலை செய்தது.

இதற்கிடையில், அபிநந்தன் தங்கள் பிடியில் இருந்த போது இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளின் உயர்மட்டத்திலான அவசர ஆலோசனை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வாவின் கால்கள் நடுங்கியதாவும், விவாதத்தின் போது அவருக்கு வியர்த்து ஊற்றியதாகவும் பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் அயாஸ் சாதிக் நேற்று தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்.. இல்லையேல் பாகிஸ்தான் மீது சரியாக 9 மணியளவில் இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கூறியதாக அந்த கூட்டத்தில் பங்கேற்ற சாதிக் நேற்று நினைவு கூர்ந்துள்ளார்.

இதனால், புல்வாமா, பாலக்கோட் தாக்குதல்கள், அபிநந்தன் விவகாரம் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் விவாதப்பொருளாகி வருகிறது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி பவாத் சௌத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் சௌத்ரி தெரிவித்ததாவது:-

நாம் இந்தியாவை அந்த சொந்த மண்ணில் தாக்கியுள்ளோம். புல்வாமாவில் நமது வெற்றி என்பது பிரதமர் இம்ரான்கானின் தலைமையிலான பாகிஸ்தான் அரசின் மக்களின் வெற்றியாகும். 

நாம் அனைவரும் இந்த வெற்றியில் பங்குபெற்றவர்கள். புல்வாமாவில் நடந்ததை நாம் பெருமையாக கொள்ளவேண்டும். ஆனால், நீங்கள் (பாக்.எதிர்க்கட்சி தலைவரை நோக்கி) அரசாங்கத்தை குறைத்து மதிப்பீடு செயவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

என்றார்.
Tags:    

Similar News