செய்திகள்
கண்காணிப்பு கேமரா.

குற்றங்களை தடுக்க பொதுமக்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - போலீசார் அறிவுறுத்தல்

Published On 2021-10-12 08:15 GMT   |   Update On 2021-10-12 08:15 GMT
வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளில் திருட்டு உட்பட குற்றச்சம்பவங்களைத் தடுக்க  போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

பிரதான சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பெருமளவு பொருத்தப்படுகின்றன. இதன்மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன. 

மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு இவைகள் உதவிகரமாக இருக்கின்றன. வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும் பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்திவிடுகின்றனர். 

வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும். திருப்பூரில் நடந்த சில கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் கூட வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளைக் கண்டறிய உதவிகரமாக இருந்துள்ளது. 

கேமராக்களை பொருத்துவதோடு இல்லாமல் அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு போலீசார் கூறினர். 
Tags:    

Similar News