செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் மது-கஞ்சா விற்ற 6 பேர் கைது
தருமபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது, கஞ்சா விற்ற 6 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்களை கைது செய்ய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அதே பகுதியை சேர்ந்த இருசாயி மற்றும் கணேசன் ஆகிய 2 பேரையும் அரசுக்குப்புறம்பாக மதுவிற்றதன் பேரில் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
இதேப்போன்று பெரும்பாலை போலீசார் நடத்திய சோதனையில் முனுசாமி என்பவரை மதுவிற்றதன் பேரில் கைது செய்தனர். இவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் இவர்களிடமிருந்து 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரூர் போலீசாருக்கு அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு மற்றும் ஆத்தோர வீதி பாலம் பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சுதாகர் (வயது 40) மற்றும் தீர்த்தான் (63) ஆகிய இருவரும் கையும்களவுமாக பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேப்போன்று கிருஷ்ணாபுரம் போலீசார் மாரவாடி பகுதியை சேர்ந்த வேடியப்பன் (69) என்பவரை கஞ்சா விற்றதன்பேரில் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.