ஆன்மிகம்
நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்

Published On 2021-11-02 07:04 GMT   |   Update On 2021-11-02 07:04 GMT
நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.
Tags:    

Similar News