செய்திகள்
வயல்கள், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
அரியலூர் அருகே வயல்கள், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர்:
‘புரெவி’ புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக கீழகொளத்தூர்- திருமானூர் செல்லும் சாலையில் தரைப்பாலம் வழியாக வயல்களில் இருந்து வழிந்தோடும் மழைநீர் குறித்து கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், விவசாய பணிகள் பாதிக்காத வகையில் மழைநீரை பொக்லைன் எந்திரங்களை கொண்டு வயல்வெளிகளில் இருந்து விரைவாக வெளியேற்றிட வேண்டும், என்றார். சுள்ளங்குடியில் செல்லும் சாலையினை பார்வையிட்ட அவர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்றிடவும், தேவையான இடங்களில் வாய்க்கால்களை சீரமைத்து, மழைநீரை வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், காட்டூர் ஏரி மற்றும் காசாங்காட்டேரி உள்ளிட்ட ஏரிகளை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து மழைநீர் வரத்தை கண்காணித்திடவும், அதற்கேற்ற உபரிநீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றிடவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட முட்டுவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.