செய்திகள்
முக ஸ்டாலின்

தி.மு.க.வில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி- முக ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2021-01-10 02:02 GMT   |   Update On 2021-01-10 02:02 GMT
தி.மு.க.வில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யாதும் ஊரே, யாவரும் கேளிர், யாதானும் நாடாமால் ஊராமால் என்றெல்லாம் பரந்து விரிந்த உலகளாவிய சிந்தனை நோக்கில் செறிவான கருத்துகளை வழங்கிச் சென்ற தமிழ்ச் சான்றோர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகளாகக் கொண்டு விளங்கிடும் இயக்கம் தி.மு.க. 1957-ம் ஆண்டு முதன்முறையாகக் தி.மு.க. தேர்தல் களத்தைச் சந்தித்தபோது வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமித்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மட்டுமே தமிழர்கள் பெருமளவில் வெளிநாடுகளைத் தேடிச்சென்ற நிலை மெல்ல மெல்ல மாறி, தி.மு.க.வின் சமூகநீதிக் கொள்கைகளாலும், பொது நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் பலரும் பொறியியல், மருத்துவம் பட்டம் பெற்று அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகள் உள்பட உலகின் பல பகுதிகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.

திராவிட இயக்க உணர்வும், தமிழர்கள் என்ற பீடும் பெருமையும் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் தாய்த் தமிழகத்தின் நலனை என்றும் மறக்காதவர்கள். அத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்களான தமிழர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் சுயமரியாதை, கண்ணியம் காக்கும் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை, தூதரகங்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்கள் ஆற்றி வரும் இயக்கப் பணிகளை மேம்படுத்தி, கட்சிக்கு மேலும் வலுசேர்த்திடவும், தி.மு.க.வில் புதிய அணியாக வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தி.மு.க.வி.ல் வெளிநாடு வாழ் இந்தியர்களைக் உறுப்பினர்களாக இணைப்பதற்கும், ஒவ்வொரு நாட்டிலும் கட்சியின் அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் கட்சியின் சட்ட திட்ட விதி 31 பிரிவு 20-ன் கீழ் ‘வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி’ என்ற ஒரு புதிய அணி அமைக்கப்படுகிறது', எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., இணைச் செயலாளர்களாக டாக்டர் செந்தில்குமார் எம்.பி., புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (நேற்று) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிற நிலையில், தி.மு.க. சார்பிலான இந்த அணி தன் பணியை அனைவரும் போற்றத்தக்க வகையில் சிறப்புடன் தொடங்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உரிமை, நலன் காக்க துணை நிற்கும். கருணாநிதி வெளியிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் புதிய துறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியும், தமிழ் மக்களின் பேராதரவுடன் விரைவில் அமையவிருக்கும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றப்படும்.

கட்சியின் புதிய அணி, வலிவும் பொலிவும் பெற்று தொடர்ந்து வளர்ந்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து உத்வேகத்துடன் செயலாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News