செய்திகள்
அகமதாபாத் மைதானம்

அகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்

Published On 2021-02-26 08:58 GMT   |   Update On 2021-02-26 08:58 GMT
இரண்டு நாட்களிலேயே போட்டி முடிந்தது நிலையில் அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

அகமதாபாத்:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 112 ரன்னும், இந்தியா 145 ரன்னும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 49 ரன் இலக்கை இந்தியா விக்கெட் இழப்பின்றி எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் மொத்தம் 30 விக்கெட் வீழ்ந்தன. இதில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.

இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 11 விக்கெட்டும், அஸ்வின் 7 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும், இங்கிலாந்து தரப்பில் ஜாக்லீச் 4 விக்கெட் டும், ஜோரூட் 5 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த நிலையில் அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர். முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் கூறும்போது, டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. இந்திய அணி கூட இந்த ஆடுகளத்தில் திணறியது என்றார்.

முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கூறும்போது, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியாவும் சிக்கலில் சிக்கி இருக்கும். ஆனால் இது இருதரப்பினருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. இந்த ஆடுகளம் டெஸ்ட்டுக்கு ஏற்றதல்ல என்றார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, இந்த ஆடுகளத்தை நாம் பார்க்க போகிறோம் என்றால், அது எவ்வாறு இயங்கக்கூடும் என்பதற்கு என்னிடம் பதில் இருக்கிறது. அணிகளுக்கு 3 இன்னிங்சை கொடுங்கள் என்றார்.

கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) கூறும்போது, பேட்ஸ்மேன்களின் திறமை சோதிக்கப்படுவதால் ஒரு போட்டிக்கு இதுபோன்ற ஆடுகளம் இருப்பது நல்லது. ஆனால் இதுபோன்ற ஒரு ஆடுகளத்தை மீண்டும் பார்க்க நான் விரும்பவில்லை. மற்ற வீரர்கள் யாரும் இதை பார்க்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு பாராட்டு என்று கூறி உள்ளார்.

ஆனால் இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆடுகளத்தை குறை சொல்லவில்லை. அவர் கூறும்போது, இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் நோக்கம் மற்றும் பயன்பாடு பற்றி சிந்திக்க வைக்கிறது. இந்த ஆடுகளத்தில் தான் ரோகித் சர்மா மற்றும் ஜாக்கிராவ்லி அரை சதங்கள் அடித்தனர்.

இங்கிலாந்து எப்படி ரன்களை சேர்க்க தவறிவிட்டோம் என்று யோசித்து கொண்டிருந்தது. பந்தை பயன்படுத்திய விதத்தில் அக்சர் பட்டேலை பாராட்ட வேண்டும். அஸ்வின் மற்றும் அக்சர் சிறப்பாக செயல்பட்டனர் என்றார்.

Tags:    

Similar News