ஆன்மிகம்
மலைக்கோட்டை தாயுமானவர்

மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு 100 கிலோ சாதத்தால் அன்ன அலங்காரம்

Published On 2021-10-22 04:55 GMT   |   Update On 2021-10-22 04:55 GMT
மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு 100 கிலோ சாதத்தால் அன்ன அலங்காரம் செய்யப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உயிர்களை இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம். அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தவிர மற்ற சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஆனால், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு ஐப்பசி மாதத்தில் வரும் அஸ்வினி நட்சத்திர பிரகாரப்படி நேற்று மாலை அன்ன அலங்காரம் நடைபெற்றது. அதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்த பின்னர் தாயுமானவர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் 100 கிலோ அரிசி கொண்டு அன்னம் தயார் செய்யப்பட்டு சுவாமியின் திருமேனி மீது படும்படி செய்து, சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாலை 4.45 மணிக்குமேல் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 6.55 மணிவரை பக்தர்கள் தாயுமானவர் சுவாமியை அன்ன அலங்காரத்துடன் தரிசனம் செய்தனர்.

பின்னர் இரவு 7 மணிக்கு மேல் தாயுமான சுவாமியின் திருமேனி மீது இருந்த அன்னத்தை ஒரு கூடையில் எடுத்தனர். இரவு 8 மணிக்கு மேல் அந்த அன்னத்தை சிந்தாமணி பகுதியில், காவிரி ஆற்றில் மீன்களுக்கு உணவாக கொடுக்கப்பட்டது. மேலும் தாயுமானவர் சுவாமிக்கு அன்ன அலங்காரம் செய்தது போக மீதம் இருந்த அன்னத்தை தயிர்சாதமாக தயார் செய்யப்பட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News