உள்ளூர் செய்திகள்
கேத்தரின் நீர்வீழ்ச்சி ரூ.2½ கோடியில் தரம் உயர்த்தப்படும்
அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
அரவேனு,
கோத்தகிரியில் குஞ்சப்பனை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்தரின் நீர்வீழ்ச்சி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். இதையடுத்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேத்தரின் நீர்வீழ்ச்சி சம்மந்தமாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டசபையில் பேசினார், அப்போது நீர்வீழ்ச்சியின் தரம் உயர்த்தப்படும், வாகனநிறுத்தம், காட்சி முனை உயர் கோபுர மாடம், நடைப்பாதை நீர்வீழ்ச்சி பாதுகாப்பு வளையங்கள் போன்ற அனைத்து வசதிகளும் ரூ. 2½ கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றார். இதையடுத்து தனியார் நகைக்கடையின் வைர நகை பிரிவை திறந்து வைக்க வந்தபோது அவர் கூறும்போது, காட்டு பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,காட்டு பன்றிகள் மூலம் அடிக்கடி மனித மோதல்கள் நடைபெற்று வருகிறது.இதனை தடுக்கும் வண்ணம் ஒரு மாதத்திற்குள் அதிகாரபூர்வ ஆணை வெளியிடப்படும் என்றார். பின்னர் கோத்தகிரி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் அன்னதான கூடம் விரிவாக்கப் பணியை ஆய்வு செய்தார்.