திருப்பத்தூர் அருகே தே.மு.தி.க. மாவட்ட செயலாளரின் அண்ணன் அடித்துக்கொலை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது45) திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக உள்ளார். இவருடைய அண்ணன் மாதேஸ்வரன் (48) விவசாயி.
நேற்று காலையில் அரிகிருஷ்ணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் (22) என்ற வாலிபருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் சமாதானமாக சென்றனர். மாலையில் ஹரிகிருஷ்ணனின் மனைவி அருணா அந்த பகுதியில் உள்ள கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஞானவேல் மற்றும் அவருடைய நண்பர்கள் கதிர்வேல் (20), துளசி (27), சந்தோஷ் (25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அருணா மீது மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அருணா தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஹரிகிருஷ்ணனின் அண்ணன் மாதேஸ்வரன் அங்கு வந்தார். அவர் ஞானவேலிடம் தட்டிக் கேட்டார்.
அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது ஞானவேல் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த மாதேஸ்வரனை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாதேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தால் எர்ரம்பட்டி கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கந்திலி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஞானவேல், கதிர்வேல், துளசி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைமறைவாக உள்ள சந்தோஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு போனில் பேசியதை தட்டிக் கேட்டதால் மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.