செய்திகள்
முக்கடல் அணை பகுதியில் கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

நாகர்கோவிலுக்கு குடிநீர் ஆதாரமான முக்கடல் அணையில் கலெக்டர் ஆய்வு

Published On 2020-11-21 02:58 GMT   |   Update On 2020-11-21 02:58 GMT
நாகர்கோவிலுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையில் நேற்று கலெக்டர் அரவிந்த் திடீர் ஆய்வு நடத்தினார்.
பூதப்பாண்டி:

நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணை. இந்த அணையில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் தண்ணீர் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 22.10 அடியாக இருந்தது. அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று முக்கடல் அணைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அணைகளின் பராமரிப்பு மற்றும் நீர்இருப்பு, குடிநீர் வினியோகம் ஆகிய விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அணையின் அருகே உள்ள சிறுவர் பூங்கா மற்றும் அறிவியல் கண்காட்சி ஆகியவற்றையும் கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார். அப்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உடன் இருந்தார்.

முக்கடல் அணையில் படகு விடலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது. அப்போது அதிகாரிகள் படகு விட்டால் அணையின் நீர் மாசுபடும். மேலும் அணை நீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்துவதால் படகு விடுவதற்கான வாய்ப்பில்லை என்று கூறினார்கள். மேலும் கோடை காலங்களில் அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு விடும்.

அப்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, அதை அனந்தனாறு கால்வாய் வழியாக கொண்டு வந்து, முக்கடல் அணை வழியாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் வினியோகிக்கப்படும் என்று மாநகராட்சி அலுவலர்கள் தேவி மற்றும் ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News