செய்திகள்
வெண்டைக்காய்

வெண்டைக்காய் விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை

Published On 2021-04-29 10:42 GMT   |   Update On 2021-04-29 14:25 GMT
வெண்டைக்காய் பயிரிடுவதற்கு ஏக்கருக்கு 3 கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படுகிறது. விதைப்பு செய்த 45 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் வெண்டைக்காய்க்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த முறை தக்காளி சாகுபடி செய்து கடும் நஷ்டத்தை சந்தித்தோம். இன்று வரை தக்காளி விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து கண்ணீர் விடும் நிலையே உள்ளது. அதனால் மாற்றுப்பயிர் குறித்து சிந்தித்ததால் வெண்டைக்காய் சாகுபடியைத் தேர்வு செய்தோம்.

வெண்டைக்காய் பயிரிடுவதற்கு ஏக்கருக்கு 3 கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படுகிறது. விதைப்பு செய்த 45 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். அதன்பிறகு தினசரி காய்கள் பறிக்கலாம். ஆனால் வெண்டைக்காய் அறுவடை என்பது சற்று கடினமான பணியாகும். ஏனென்றால் அறுவடையின்போது காய் மற்றும் செடியிலுள்ள முட்கள் பட்டு கை முழுவதும் புண்ணாகி விடும் அபாயம் உள்ளது. இதனால் கையுறை அணிந்து, கவனமாக அறுவடை செய்ய வேண்டும்.

ஏற்கனவே கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் வெண்டைக்காய் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில் அன்றன்று அறுவடை செய்ய வேண்டிய காய்களை அன்றன்று அறுவடை செய்யாவிட்டால் முற்றி வீணாகி விடும். இதனால் கடும் சிரமத்துக்கு மத்தியில் அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால் அங்கு போதிய விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 6 முதல் 8 வரையே விற்பனையாகிறது. சில நாட்களில் விற்பனையாகாமல் வீதியில் கொட்டி விட்டு செல்கிறோம். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அறுவடைப் பணிகள் மேற்கொள்கிறோம்.

அதற்கு ஒரு ஆளுக்கு கூலியாக ரூ. 200 கொடுக்கிறோம். ஒரு ஆள் 20 கிலோ முதல் 25 கிலோ வெண்டைக்காய்களையே பறிக்க முடிகிறது. இதனால் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். தற்போது வெண்டைக்காய் வரத்து குறைவாகவே உள்ளது. ஆனாலும் போதிய விலை கிடைக்காததற்கு காரணம் தெரியவில்லை.

எனவே உழவு ஓட்டி வெண்டைச்செடிகளை அழித்து விட்டு மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய முடிவெடுத்துள்ளோம். ஆனாலும் என்ன பயிர் செய்தால் லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. தோட்டக்கலைத் துறையினரும் வேளாண் வணிகத் துறையினரும் இணைந்து என்ன பருவத்தில் என்ன பயிர் செய்தால் லாபம் கிடைக்கும் என்பது குறித்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

Similar News