காரமடை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு- பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது
காரமடை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (58). இவர் கடந்த ஜனவரி மாதம் கோத்தகிரியில் இருந்து காரமடை காந்திநகர் பகுதியில் உள்ள தனது மருமகளின் வீட்டிற்கு வந்தார். அவர் காந்திநகர் பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை நோட்டமிட்ட 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தனர். அப்போது விஜயலட்சுமி செயினை இறுக்கி பிடித்து கொண்டார்.
ஆனால் அந்த வாலிபர்கள் செயினை பறித்து சென்றனர். பின்னர் இது குறித்து விஜயலட்சுமி காரமடை போலீசில் புகார் தெரிவித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்த போது அதில் கொள்ளையர்கள் சங்கிலி அறுத்து சென்றது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று காரமடை அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழிப்பறி பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 25) என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் விஜயலட்சுமியிடம் செயினை பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து சுபாசிடம் இருந்து 2½ பவுன் தங்க செயினை மீட்டு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.