செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அரசு அலுவலர்கள், ஊழியர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர் அறிவுறுத்தல்

Published On 2021-04-12 13:49 GMT   |   Update On 2021-04-12 13:49 GMT
உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கூடங்கள், கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை:

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-  தற்போது தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கபசுர குடிநீர் இரு வேளைகளும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, பல நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவை குறைத்தோம். ஒருங்கிணைப்பு குழு மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. 

நானே அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த நல்ல பல கருத்துகளை, ஆலோசனைகளை வழங்கி, மாவட்ட நிர்வாகமும் சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததன் விளைவாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்தது.

அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கூடங்கள், கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதலாளிகள் கொரோனா தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

தொழிற்சாலை நிர்வாகம் மருத்துவமனையை அணுகினால் அங்கேயே வந்து தடுப்பூசி செலுத்த அரசு தயாராகவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மொத்தமுள்ள மருத்துவமனைகளில் 78 சதவிகித மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் கூறினார்.
Tags:    

Similar News