செய்திகள்
தூத்துக்குடியில் ரூ.5 கோடி கஞ்சா எண்ணெய் பறிமுதல்
தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெயை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் தூத்துக்குடியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வண்ணார் தெருவில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை செய்தனர். அதில் சுமார் 5 கிலோ கஞ்சா எண்ணெய் (ஹசீஷ்) கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கஞ்சா எண்ணெயை கேரள மாநிலம் திருச்சூரில் இருந்த தூத்துக்குடிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.