செய்திகள்
இம்ரான் கான்

வறுமை, கல்லாமையை ஒழிக்க ஒன்றிணைந்து உழைப்போம்: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு

Published On 2019-11-09 13:49 GMT   |   Update On 2019-11-09 13:49 GMT
சாத்தியமானவற்றை மட்டும் சிந்தித்து வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழிப்பதற்கு நாம் ஒன்றிணைந்து உழைப்போம் என பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் கர்தார்பூர் பாதையை இன்று காலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இதற்காக உழைத்தமைக்காக இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கர்தார்பூர் பாதையை இன்று மாலை திறந்து வைத்த அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது:-

பஞ்சாப் முதல் மந்திரிக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் இதர பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்கும் யாத்திரைக்காக இங்கு வந்துள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்!

குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளை கொண்டாடும் சீக்கிய மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கர்தார்பூர் பாதை பணிகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து வைத்தமைக்காக உங்களுக்கும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மனிதநேயமும் நீதியும் தான் மிருகங்களிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காட்டுகின்றன. சூழ்நிலைக்கேற்ப பொருந்திக் கொள்வது மனிதநேயமல்ல.

கடவுள் நமது இதயங்களில் குடியிருக்கிறார். மக்களை நீங்கள் மகிழ்வித்தால் கடவுளை மகிழ்வித்ததாகும். இங்கு வந்துள்ள சீக்கிய மக்களின் மகிழ்ச்சியை கண்டு நானும் மகிழ்கிறேன்.



முஸ்லிம்களால் மதினாவை தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே முடியும். ஆனால், அங்கு போக முடியாது என்பதை கற்பனை செய்து பாருங்கள். அதைப்போல் இங்குள்ள குருத்வாராவை காண விரும்பும் சீக்கியர்களுக்கு இந்த கர்தார்பூர் பாதை எத்தனை முக்கியமானது என்பதை எண்ணிப்பார்த்து, இதை திறந்து வைப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சீக்கிய சமுதாயத்துக்கு வெளியே இருந்தும் குருநானக் நமக்களித்த போதனைகளை படித்தால் அவர் மனிதர்களை இணைப்பதற்காக பேசியுள்ளார், பிரிப்பதற்காக அல்ல என்பதை அறியலாம். வெறுப்புணர்வை பரப்பும் வகையில் அவர் பேசியதில்லை.

தென்னாப்பிரிக்காவை தாக்கிய நிறவெறியால் அந்நாடு முற்றிலுமாக பிளவுபட்டது. அங்கு அமைதியும் நீதியும் உருவாகும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. அங்கு ரத்த ஆறு ஓடும் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால், அதற்கு மாறாக ஒரு தலைவர் 27 ஆண்டுகள் தன்னை சிறைக்குள் வருத்திக்கொண்டு மக்களை ஒன்றிணைத்துக் காட்டினார். நான் இரண்டு விஷயங்களை கூற விரும்புகிறேன். ஒரு தலைவர் எப்போதுமே மக்களை ஒன்றிணைப்பார். அவர்களை பிரிக்க மாட்டார். ஒரு தலைவர் எந்நாளும் வெறுப்புணர்வை விதைக்க மாட்டார்.

வெறுப்புணர்வை பரப்புவதன் மூலம் ஓட்டு ஆதாயம் பெற முயற்சிக்க மாட்டார். அவ்வகையில், நிறவெறி தலைவிரித்தாடிய வேளையில் தென்னாப்பிரிக்க மக்களை ஒன்றிணைத்த நெல்சன் மண்டேலா என்றென்றும் மிக உயர்வான தலைவராக எப்போதுமே மதிக்கப்படுவார்.

எங்களது இறைத்தூதர் முஹம்மது நபியும் மனிதர்களை ஒன்றிணைத்தார். வெறுப்புணர்வைப்பற்றி அவர் எப்போதும் பேசியதில்லை. மக்களை ஒற்றுமைப்படுத்துவதை மட்டுமே அவர் பேசினார். ஒரு மனிதரை கொல்வது ஒட்டுமொத்தமாக மனிதகுலத்தை கொல்வதற்கு சமமானது என்று எங்களது இஸ்லாமிய மதம் கூறுகின்றது.

இந்தியா பக்கமுள்ள எல்லையை பாகிஸ்தான் திறக்க வேண்டும் என நவ்ஜோத் சித்து என்னிடம் கேட்டுக்கொண்டார்.

நான் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக வறுமை ஒழிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது தொடர்பாக நரேந்திர மோடியிடம் பேசினேன். காஷ்மீர் பிரச்சனையை பக்கத்து வீட்டுக்காரர்கள் போல் அமர்ந்துபேசி தீர்த்துக் கொள்ளலாம் என அவரிடம் நான் கூறினேன்.

நாம் இனி மனிதர்களாக இருப்போம் என்பதை திரு. மோடி அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். சாத்தியமானவற்றை மட்டும் சிந்தித்து வறுமை, கல்லாமை ஆகியவற்றை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து நாம் உழைப்போம்.

ஜெர்மனியும் பிரான்சும் முன்னர் போரில் சண்டையிட்ட நாடுகள்தான். ஆனால், அவர்களை இப்போது பாருங்கள். எல்லை கடந்த அவர்களது நட்புறவும் வர்த்தகமும் வளர்ந்து வருவதை பாருங்கள். நமது துணைக்கண்டத்திலும் இதுபோன்ற வளர்ச்சியை நான் காண விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News