தொழில்நுட்பம்
சாம்சங் புது மடிக்கக்கூடிய சாதனங்கள் ஆகஸ்ட் 11-இல் வெளியீடு?
சாம்சங் நிறுவனம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வில் கேலக்ஸி இசட் ப்ளிப் 3, கேலக்ஸி இசட் போல்டு 3, கேலக்ஸி வாட்ச் 4, கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 4 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 போன்ற சாதனங்களை சாம்சங் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இம்முறையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்வு சாம்சங் வலைதளம், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது. ஆகஸ்டில் அன்பேக்டு நிகழ்வு குறித்து சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் இம்முறை ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது. இதுதவிர கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 11 இல் நடைபெறும் என்றும் இணையத்தில் பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.