திருவண்ணாமலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி, அவரது பாட்டியுடன் வசித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் பெங்களூருவில் உள்ளனர். மாணவியின் பாட்டி வீட்டின் மேல் மாடியை தேவாலயமாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த ஆலயத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (வயது 20) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு செல்லத்துரை, மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து செல்லத்துரை கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி இரவு 10 மணி அளவில் மாணவியின் பாட்டியை பார்க்க திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர், கண்பார்வையற்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவருடன் வந்துள்ளார்.
அப்போது மாணவியிடம், நைஜீரியாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் வெளிநாட்டிற்கு அழைத்து செல்வார் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பிய மாணவியும், அவரது பாட்டியும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டிற்கு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி இரவு சென்றுள்ளனர். அப்போது நைஜீரியாவை சேர்ந்தவருடன் 3 நாட்கள் மாணவி தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெரியம்மா சென்னைக்கு சென்று மாணவியை மீட்டு திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை சைல்டு லைன் அலுவலர்கள் அக்டோபர் மாதம் 26-ந்தேதி மாணவியை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர்.
இது குறித்து மாணவி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்லத்துரை, மாணவியின் பாட்டி, நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.