உண்மை எது
கோவா பற்றிய வரலாற்று தகவல் - பிரதமர் மோடி கருத்தில் பிழை
போர்த்துகீசு கோவாவை கைப்பற்றிய போது முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 19-ம் தேதி விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது. விடுதலை தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கோவா விடுதலை தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்பு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பேசும் போது, 'போர்த்துகீசு கோவாவை கைப்பற்றிய போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை முகலாயர்கள் ஆட்சி செய்து வந்தனர்,' என தெரிவித்தார். பிரதமர் மோடி உரையை பல்வேறு செய்தி நிறுவனங்கள் அப்படியே செய்தியாக வெளியிட்டன.
இதுகுறித்த இணைய தேடல்களில், பிரதமர் மோடி கூறிய கருத்தில் பிழை இருப்பது கண்டறியப்பட்டது. பிரதமர் மோடி கூறிய தகவலை ஆய்வு செய்த போது, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நஜப் ஹைதர், 'முகலாயர்கள் 1526 ஆம் ஆண்டு இந்தியாவை கைப்பற்றினர். போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றிய போது முகலாயர்கள் அதிகாரத்தில் இல்லை,' என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அந்த வகையில் போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றும் போது முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யவில்லை என உறுதியாகிவிட்டது.