செய்திகள்
விபத்து

துபாயில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 42 சதவீதம் குறைந்தது- அதிகாரி தகவல்

Published On 2020-10-30 02:48 GMT   |   Update On 2020-10-30 02:48 GMT
துபாயில், சாலை விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டை விட 42 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
துபாய்:

சாலை விபத்துகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் துபாய் போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு துபாய் போலீஸ் துறையின் தலைவர் அப்துல்லா கலீபா அல் மர்ரி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட துபாய் போலீசின் போக்குவரத்து விபத்து துறை தலைவர் அப்துல்லா பின் காலிப் பேசும்போது கூறியதாவது:-

துபாய் நகரில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இந்த பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மத்தியிலும் இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகைய தொடர் முயற்சிகளின் காரணமாக துபாய் நகரில் உள்ள சாலைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் நடந்த விபத்துகளில் 66 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 132 ஆக இருந்தது. எனவே. விபத்துகள் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டை விட 42 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் சாலை விபத்துக்களும் 46 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து குறைந்திருந்தது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதும் பெருமளவு குறைந்து காணப்பட்டது. விபத்துகள் குறைந்ததால் உயிரிழப்பும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News