செய்திகள்
விசாரணை

நீட் தேர்வு முறைகேடு- கைதான புரோக்கரிடம் விடிய விடிய விசாரணை

Published On 2020-02-08 04:46 GMT   |   Update On 2020-02-08 04:46 GMT
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான மேலும் ஒரு இடைத்தரகரிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

தமிழகத்தில் நீட் தேர்வில் முறைகேடு செய்து பல்வேறு மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் முதன் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

நீட்தேர்வில் மோசடி செய்த 6 மாணவர்கள், 6 மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஒரு இடைத்தரகர் என 13 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பவித்ரன் நீட்தேர்வு எழுதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்தது தெரிய வந்தது. போலீசார் பவித்ரனை கைது செய்து விசாரித்தனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த புரோக்கர் மனோகரன் மூலம் நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மனோகரனை கைது செய்து தேனி தர்மபுரம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

முன்னதாக ஆறுமுகம் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு தரகர் சிக்கியுள்ளார். இவருக்கும் முக்கிய தரகரான ரசீத்துக்கும் தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. எனவே அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News