செய்திகள்
தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்களுக்கான பயிற்சி வகுப்பில் கலெக்டர் சாந்தா

திருவாரூர் மாவட்டத்தில் 12 பறக்கும் படை குழுக்கள் அமைப்பு- கலெக்டர் சாந்தா தகவல்

Published On 2021-03-02 10:56 GMT   |   Update On 2021-03-02 10:56 GMT
சட்டமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என கலெக்டர் சாந்தா கூறினார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்களான பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களில் பணியமர்த்தப்பட்டுள்ள அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி தேர்தல் செலவினம் மற்றும் நன்னடத்தை விதிமீறல்களை தவிர்த்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம் 12 பறக்கும் படை குழுக்களும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம் 12 நிலைக்கண்காணிப்புகுழுக்களும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 1 குழுக்கள் வீதம் 4 வீடியோ கண்காணிப்பு குழுக்களும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 1 குழு வீதம் 4 செலவின குழுக்களும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 1 குழு வீதம் 4 வீடியோ பார்வைகுழுக்களும், மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒருவர் வீதம் 4 உதவி தேர்தல் செலவின பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய குழுக்களில் பணியமர்த்தப்பட்டுள்ள அரசு பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் செலவினத்திற்கான உச்சவரம்பு, மேற்கொள்ளப்படும் செலவினம் போன்ற தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து பதிவு செய்ய வேண்டும். மேலும் தேர்தல் நன்னடத்தை தொடர்பான புகார்களை விசாரணை செய்து தேர்தல் நடத்தும் உரிய அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்தானகிருஷ்ணன், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் புகழேந்தி, உதவி கலெக்டர்கள் பாலசந்திரன், அழகர்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்மணி, உதவி ஆணையர் (கலால்) பானுகோபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர் அருணாச்சலம், தனி தாசில்தார் (தேர்தல்) திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News