ஆன்மிகம்
புனிதநீர் சேகரிக்கப்பட்டு யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம்.

காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர்

Published On 2019-11-29 05:14 GMT   |   Update On 2019-11-29 05:14 GMT
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலைக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் எனப்படும் லட்சுமிநரசிம்மர்கோவில் உள்ளது. இக்கோவில் முற்காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டதால் காட்டழகியசிங்கப்பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து வருகிற 1-ந்் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் வெளிப்பிரகார விரிவாக்கம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கடந்த 18-ந்தேதி கருவறை பாலாலயம் செய்யப்பட்டு, அங்கு திருப்பணிகள் நடந்தன.

நேற்று முன்தினம் மாலை பாஞ்சராத்தர ஆகம முறைப்படி முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனிதநீர் சேகரித்து யானை மீது வைத்து வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்றும்(வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

வருகிற 1-ந்தேதி அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி 8 மணியளவில் மகாபூர்ணாஹுதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 8.45 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கருவறை விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள் நடத்துகின்றனர்.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா, சுதர்சன ரங்காச்சாரி ஆகியோர் தலைமையில் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News