செய்திகள்
வெள்ளை மாளிகை

வலுவான இந்தியாதான், சீனாவுக்கு சமமாக செயல்படும் - வெள்ளை மாளிகை ஆவணத்தில் பரபரப்பு தகவல்

Published On 2021-01-13 21:26 GMT   |   Update On 2021-01-13 21:26 GMT
வலுவான இந்தியாதான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஆவணம் கூறுகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் வெளியேறுகிறது. ஜோ பைடனின் புதிய நிர்வாகம், 20-ந்தேதி ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறது.

இந்த தருணத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஓ பிரையன், பாதுகாப்பு சார்ந்த 10 பக்க ஆவணத்தை ரகசியமற்ற ஆவணமாக வகைப்படுத்தி, அது வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் அமெரிக்காவின் ராணுவம் சார்ந்த கட்டமைப்பின் தயாரிப்பான இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவின் விருப்பமான கூட்டாளி, அமெரிக்கா.

இவ்விரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிற பிராந்தியங்களில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றன. சீனாவின் எல்லை அத்துமீறல்களை எதிர்கொள்ளும் திறனை இந்தியா பராமரித்து வருகிறது.

தெற்காசியாவில் இந்தியா முதன்மையானது. இந்திய பெருங்கடல் பாதுகாப்பை பேணுவதில், அது முக்கிய பங்கு வகிக்கிறது. தென்கிழக்கு ஆசியாவுடனான ஈடுபாட்டையும் அந்த நாடு அதிகரிக்கிறது. மேலும் தனது பொருளாதார, ராணுவ, தூதரக ஒத்துழைப்பை அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற கூட்டாளிகளுடன் விரிவுபடுத்துகிறது.

ஒரு வலுவான இந்தியா, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் ஒத்துழைப்புடன் சீனாவுக்கு சரிநிகர் சமானமாக எதிர்நிலையில் நின்று செயல்படும்.

அமெரிக்காவும், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள அதன் கூட்டாளிகளும் தங்கள் இறையாண்மையை பலவீனப்படுத்தும் நோக்கில் செயல்படும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்க்கின்றன.

பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கிய வழங்குனராகவும், முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாகவும் பணியாற்றுவதற்கான இந்தியாவின் உயர்வையும், திறனையும் விரைவுபடுத்துவதே எங்கள் நோக்கம் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News