செய்திகள்
மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய இடி-மின்னலுடன் கனமழை

Published On 2019-10-22 14:57 GMT   |   Update On 2019-10-22 14:57 GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

ராமநாதபுரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியையொட்டி உள்ள அரபிகடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் முதல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடிமின்னலுடன் அடைமழையாக பெய்தது. முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

மவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நீர்நிலைகள் தற்போது பெய்துவரும் மழையால் நிரம்பி வருகின்றன. மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி நின்றது. மழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

கடலாடி-6.20

வாலிநோக்கம்- 13.80

கமுதி- 9.50

பள்ளமோர்க்குளம்- 13.50

முதுகுளத்தூர்- 41.20

பரமக்குடி-63.60

மண்டபம்-176.90

ராமநாதபுரம்-39

ராமேசுவரம்-165.10

தங்கச்சி மடம்-168.30

தீர்த்தாண்டதனம்-47.13

திருவாடானை-59.60

தொண்டி-50.80

மாவட்டத்தின் மொத்த மழை அளவு 1101.60 மி.மீ. ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் பாம்பனில் அதிக பட்ச மழை அளவு பதிவாகி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

மாவட்ட அளவில் நேற்று இரவு பெய்த கனமழையில் முதுகுளத்தூரில் 3 வீடுகள் சேதமடைந்து உள்ளது. இதற்கான நிவாரணம் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து பண்ணை குட்டைகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News