ஆன்மிகம்
மலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது

மலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது

Published On 2020-11-24 06:52 GMT   |   Update On 2020-11-24 06:52 GMT
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி மலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

பிரசித்தி பெற்ற பழமையான இந்த மலைக்கோட்டை 273 அடி உயரமும், 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடுவில் உள்ள பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மலைக்கோட்டை கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் மாலை, மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமான சுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியால் தயார் செய்யப்பட்ட திரியில், 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி மகா தீபம் ஏற்றப்படும். இந்த கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியும்.

இந்த ஆண்டுக்கான தீபத் திருநாள் வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் கார்த்திகை தீப கோபுரம் முன்பு பூர்வாங்க பூஜை நடைபெற்றது. பின்னர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக நேற்று முன்தினம் திரி தயாரிக்கப்பட்டது. பின்னர் அந்த திரி, கோவில் ஊழியர்கள் மூலம் இரும்பு கோபுரம் மீது உள்ள பிரமாண்ட செப்பு கொப்பரையில் கயிறு கட்டி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று காலை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவை திரி மீது கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றும் பணி தொடங்கியது. இந்த எண்ணெயை திரி நன்றாக உறிஞ்சும். இந்த பணிகள் மேலும் சில நாட்கள் நடைபெறும். அதன்பிறகு வருகிற 29-ந் தேதி மாலை பிரமாண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News