செய்திகள்
டெங்கு கொசு

கடந்த 10 தினங்களில் 45 குழந்தைகள் பலி- டெங்கு காய்ச்சல் காரணமா?

Published On 2021-09-01 06:55 GMT   |   Update On 2021-09-01 06:55 GMT
தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெரோசாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர்.

6 வயதான லக்கி என்ற குழந்தை கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை ஆக்ராவுக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். குழந்தையை ஆக்ராவை அடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக அந்த குழந்தை இறந்தது.

இது மாதிரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்கு பல குழந்தைகள் இறந்துள்ளன. பெரோசாபாத்தில் கடந்த 10 தினங்களில் 45 குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்கள் இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது மருத்துவமனையில் 186 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பெரோசாபாத் மாவட்ட நிர்வாகம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வருகிற 6-ந் தேதி வரை மூட உத்தரவிட்டது.

முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்தார்.



மேலும் இறந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தலைநகர் டெல்லியிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் (ஆகஸ்டு) 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 28-ந் தேதி வரை 97 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது ஒரு ஆண்டில் டெல்லியில் அதிகமான பாதிப்பாகும். 2018-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் டெல்லியில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக உள்ளது.


Tags:    

Similar News