செய்திகள்
டாக்டர் வெங்கடேசன்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்

Published On 2019-11-27 06:30 GMT   |   Update On 2019-11-27 06:30 GMT
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
தேனி:

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். இவரது மகன் உதித்சூர்யா நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த புகாரின் பேரில் டாக்டர் வெங்கடேசன் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பான், அவரது தந்தை முகமது சபி, தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.



இவர்கள் அனைவரும் தேனி மாவட்ட சிறை மற்றும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவி பிரியங்கா மற்றும் 5 மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அவர்கள் பெற்றோர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

 மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி ஜே.எம். கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அவரது சார்பில் ஆஜரான வக்கீல், டாக்டர் வெங்கடேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக கல் அடைப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார்.

எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்ற நீதிபதி பன்னீர்செல்வம் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜாமீன் வழங்கினார். இதனையடுத்து 2 மாதத்திற்கு பிறகு டாக்டர் வெங்கடேசன் வெளியில் வந்தார்.

Tags:    

Similar News