செய்திகள்
இந்த கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது -பாராளுமன்ற தாக்குதலை நினைவுகூர்ந்த மோடி
பாராளுமன்றத்தை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் 14 பேர் பலியானார்கள். இவர்களில் 5 பேர் பயங்கரவாதிகள், 9 பேர் பாதுகாப்பு படையினர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2001ல் பாராளுமன்றம் மீது நடத்தப்பட்ட கோழைத்தமான தாக்குதலை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என கூறி உள்ளார்.
பாராளுமன்றத்தை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.