செய்திகள்
கோப்பு படம்

நெல்லையில் வங்கி பெண் ஊழியரிடம் நூதன முறையில் 5 பவுன் நகை ‘அபேஸ்’

Published On 2020-11-21 11:10 GMT   |   Update On 2020-11-21 11:10 GMT
நெல்லையில் ராணுவ உடையில் வந்த மர்மநபர்கள், வங்கி பெண் ஊழியரிடம் நூதன முறையில் 5 பவுன் நகையை ‘அபேஸ்‘ செய்து சென்று விட்டனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டி ராம்நகரை சேர்ந்தவர் மேகவண்ணன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு வந்து செல்வார். நேற்று காலை வழக்கம் போல் பஸ்சில் வந்து கொக்கிரகுளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

பின்னர் அங்கிருந்து வங்கி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் மார்க்கெட் முன்பு சென்றபோது ராணுவ உடை போன்று அணிந்திருந்த 2 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுப்புலட்சுமியிடம், தற்போதுதான் இந்த பகுதியில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. எனவே நீங்கள் நகை அணிந்து செல்லக்கூடாது என்று கூறினார்கள். நகையை கழற்றி தாருங்கள், அதை பத்திரமாக பொதிந்து தருகிறோம் என்றும் அதிகார தோரணையில் கேட்டனர். மேலும் வடமாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் போல் தங்களை காட்டிக் கொண்டனர்.

இதை நம்பிய சுப்புலட்சுமி தான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழற்றிக் கொடுத்தார். அதை ஒருவர் வாங்கி காகிதத்தில் பொதிந்து கொடுத்தார். சிறிது தூரம் சென்ற நிலையில் சுப்புலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர் காகித பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, அதில் நகையை காணவில்லை. கல் தான் இருந்தது. அப்போதுதான் மர்மநபர்கள் தன்னிடம் நூதன முறையில் நகையை ‘அபேஸ்‘ செய்தது அவருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி அங்கு திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ராணுவ உடையில் வந்த மர்மநபர்கள், வங்கி பெண் ஊழியரிடம் நூதன முறையில் நகை அபேஸ் செய்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News