செய்திகள்
மழை

சென்னையில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

Published On 2019-11-28 09:13 GMT   |   Update On 2019-11-28 09:13 GMT
வருகிற 30-ந் தேதி மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் சென்னையில் மிதமான முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. நேற்று முதல் வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் வருகிற 30-ந் தேதி மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 30-ந் தேதி (சனிக்கிழமை) டிசம்பர் 1, 2 தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்களிலும், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 3 நாட்களும் மிதமான முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. தாம்பரம் ஐ.ஏ.எஸ். 13 செ.மீ., ஜெயங்கொண்டம் 10 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர் 9 செ.மீ., காட்டுமன்னார்கோவில் 8 செ.மீ., சீர்காழி, கடலூர் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News