புதுவையில் 54 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது
புதுச்சேரி:
புதுவை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான வழக்குகள், கல்வித்தகுதி தொடர்பாக தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் குற்றப்பின்னணி வேட்பாளர்களில் ஆய்வு செய்யப்பட்ட 323 பேரில் 54 பேர் மீது (17 சதவீதம்) கிரிமினில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28 பேர் மீது (9 சதவீதம்) கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும், ஒரு வேட்பாளர் மீது கொலை முயற்சி வழக்கும். ஒரு வேட்பாளர் மீது பெண்ணை மானபங்கம்படுத்தி தாக்கிய வழக்கும் உள்ளது. இது கடந்த 2016 தேர்தலில் 30 பேராக இருந்தது.
கட்சி ரீதியாக கிரிமினல் வழக்கு விவரம்:
அ.தி.மு.க.வில் 5 வேட்பாளர்களில் 3 பேர் மீதும் (60 சதவீதம்), பா.ஜனதாவில் 9 வேட்பாளர்களில் 5 பேர் மீதும் (56 சதவீதம்), தி.மு.க. வேட்பாளர்கள் 13 பேரில் 7 பேர் மீதும் (54 சதவீதம்), காங்கிரசில் 14 வேட்பாளர்களில் 4 பேர் மீதும் (29 சதவீதம்) கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடுமையான கிரிமினல் வழக்குகள் விவரம்:
அ.தி.மு.க.வில் 5 வேட் பாளர்களில் 2 பேர் மீதும் (40 சதவீதம்), பா.ஜனதாவில் 9 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் (22 சதவீதம்), காங்கிரசில் 14 வேட்பாளர்களில் 2 பேர் மீதும் (14 சதவீதம்), என்.ஆர்.காங்கிரசில் 16 வேட்பாளர்களில் ஒருவர் மீதும் (6 சதவீதம்), சுயேட்சை வேட்பாளர்களில் 96 பேரில் 4 பேர் மீதும் (4 சதவீதம்) கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
புதுவையில் 162 வேட்பாளர்கள் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். இது 50 சதவீதமாகும். 133 பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் (41 சதவீதம்), 18 பேர் பட்டயப்படிப்பும், 6 பேர் படிக்காதவர்கள் என்றும், 4 பேர் ஓரளவு படிக்கத்தெரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
புதுவையில் போட்டியிடுவோரில் 175 பேர் 41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இது 54 சதவீதமாகும். அதே போல் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் 109 பேர். 61 முதல் 80 வயதுக்கு உட்பட்டோர் 39 பேர்.
புதுவையில் பெண் வேட்பாளர்கள் 35 பேர் களத்தில் உள்ளனர். அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 343 பேரில் 26 பேர் களத்தில் இருந்தனர்.