செய்திகள்
கட்டணம் செலுத்த கடைசி நாள்: மின்வாரிய அலுவலகங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
மின்கட்டணம் செலுத்த நேற்று கடைசி நாள் என்பதால் நாகர்கோவில் மின்வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்:
கொரோனா ஊரடங்கால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் ஜூன் 15-ந் தேதி வரை நீட்டித்தது தமிழக அரசு. இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் நேற்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்ற அவர்கள் மின் கட்டணத்தை செலுத்தினர்.
நாகர்கோவிலில் வடசேரி, மீனாட்சிபுரம், பார்வதிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 7 மின்வாரிய அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால், மின்வாரிய ஊழியர்கள் திகைத்து போனார்கள்.
மேலும் அவ்வப்போது, கட்டணம் செலுத்துவதற்கான மின்வாரிய இணையதளத்தின் சர்வரில் கோளாறும் ஏற்பட்டது. இதனால் கட்டணம் செலுத்துவதற்கு வந்தவர்கள் சில மணி நேரம் காத்திருந்து கட்டணத்தை செலுத்தினர்.