செய்திகள்
கைது

சொத்தை எழுதி தர மறுத்த தந்தை அடித்துக்கொலை- லாரி டிரைவர் கைது

Published On 2021-04-09 04:13 GMT   |   Update On 2021-04-09 04:13 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சொத்தை எழுதி தர மறுத்த தந்தையை அடித்துக்கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 54). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அண்ணாமலை (33). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

தன் தந்தை பெயரில் உள்ள 30 சென்ட் விவசாய நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி அண்ணாமலை நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். அதற்கு அய்யாசாமி மறுத்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தந்தையிடம் சொத்தை எழுதி தரும்படி அண்ணாமலை வற்புறுத்தி உள்ளார். அதற்கு அய்யாசாமி மறுக்கவே தந்தையை அடித்து, எட்டி உதைத்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அய்யாசாமி பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த அண்ணாமலை தப்பி செல்வதற்காக சோமனஅள்ளி பஸ் நிறுத்தத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தார்.

இதற்கிடையே அய்யாசாமி கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த பாலக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று அண்ணாமலையை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News