உள்ளூர் செய்திகள்
முருகம்பாளையம் - பாறைக்காடு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை அதிகாரிகள் பார்வையிட்ட காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் ரேசன் அரிசி கடத்தல்

Published On 2021-12-19 08:02 GMT   |   Update On 2021-12-19 08:23 GMT
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது ரேசன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் முருகம்பாளையம் - பாறைக்காடு பகுதியில் ஒரு சரக்கு ஆட்டோ சென்றது. அதில் ஏராளமான  மூட்டைகள் இருக்கவே சந்தேகமடைந்த  அப்பகுதி பொதுமக்கள் சிலர் அந்த ஆட்டோவை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கினர்.

இதையடுத்து அதில் இருந்த   டிரைவர் இறங்கி தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் ஆட்டோவில் இருந்த சாக்கு மூட்டைகளை பார்த்த போது ஏறத்தாழ 2.5 டன் அளவு ரேசன் அரிசி இருந்தது.

இதுகுறித்து போலீசார் மற்றும் சிவில் சப்ளை தனி தாசில்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு சென்ற அதிகாரிகள் ஆட்டோவையும், அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் அரிசி மூட்டை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்திய வேளையில் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கும்பலை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தாக கூறி அப்பகுதியை சேர்ந்த வினோத்  மற்றும் அவருடன் வந்த 2 நண்பர்களையும் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.

இதனை கண்ட பொதுமக்கள் துரத்திய போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது ரேசன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம ஊத்துக்குளி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ஏராளமான நெல் மூட்டைகள் கிடந்தன.

அவை சரக்கு ரெயிலில் இருந்து விழுந்ததா? அல்லது கடத்தல் நெல் மூட்டைகளா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூர் மாநகரில் உள்ள மாவு மில்களில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இருப்பினும் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெறுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News