செய்திகள்
மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு

புனிதத்தன்மை அழிந்துவிட்டது... மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர்

Published On 2021-08-11 06:45 GMT   |   Update On 2021-08-11 13:19 GMT
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பெருமளவு முடங்கியது. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இவ்வாறு விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றியதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்நிலையில், பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை முதலில் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.



முன்னதாக மாநிலங்களவையில் பேசிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று நடந்துகொண்ட விதம் குறித்து உருக்கமாக பேசினார். உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறிவிட்டதாகவும், சில உறுப்பினர்கள் மேஜை மீது அமர்ந்தும், சிலர் மேஜைகளில் ஏறியும் அமளியில் ஈடுபட்டதால், அவையின் புனிதத்தன்மை அழிந்துவிட்டதாகவும் அவைத்தலைவர் கண்ணீர்மல்க பேசினார்.

நேற்று அமளியில் ஈடுபட்ட எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News