செய்திகள்
கோப்புபடம்

மணப்பாறை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2021-01-25 08:17 GMT   |   Update On 2021-01-25 08:17 GMT
மணப்பாறை அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்தபகுதியில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த சில மாதங்களாக முறையான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றினாலும் அதில் ஒன்றிரண்டு குடங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான மக்கள் தண்ணீரை தேடி அலைய வேண்டிய நிலை இருந்து வந்தது. இதுமட்டுமின்றி ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டனர்.

இதுதொடர்பான ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீரின்றி கடும் சிரமத்திற்கு ஆளான பொது மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News