செய்திகள்
கோப்பு படம்

நண்பரின் மனைவியை கடத்தி குடும்பம் நடத்திய தொழிலாளி

Published On 2019-10-10 16:20 GMT   |   Update On 2019-10-10 16:20 GMT
மார்த்தாண்டம் அருகே நண்பரின் மனைவியை கடத்தி குடும்பம் நடத்திய தொழிலாளி போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில்:

மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளி ஒருவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

தொழிலாளி கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த இன்னொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபரும் கட்டிட வேலையே செய்து வந்ததால் இருவருக்கும் நட்பு மலர்ந்தது.

இதனால் தொழில் விசயமாக பேச அந்த வாலிபர் தொழிலாளி வீட்டுக்கு வந்து செல்ல தொடங்கினார்.

தொழிலாளி வீட்டுக்கு வந்து சென்ற நண்பர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடனும் அன்பாக பேசுவார். நாளடைவில் தொழிலாளியை விட அவரது மனைவியை அதிகமாக சந்திக்க தொடங்கினார்.

இதனால் தொழிலாளி வீட்டில் இல்லாத நேரத்திலும் அவரது வீட்டிற்கு நண்பர் வரத்தொடங்கினார். இருவரும் பூட்டிய வீட்டுக்குள் பல மணி நேரம் தனியாக இருக்க தொடங்கினர்.

இது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அரசல் புரசலாக அவர்கள் இதனை தொழிலாளியின் காதுக்கு கொண்டு சென்றனர். அவர் மனைவியின் மாற்றத்தை கண்டு அதிர்ச்சியானார். அவரை கண்டிக்கவும் செய்தார்.

இதனால் மனம் உடைந்த தொழிலாளியின் மனைவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். கலங்கி போன தொழிலாளி மாயமான மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தார். அப்போது மனைவி மாயமான அதே நாளில் அவரது நண்பரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே நண்பர் தான் மனைவியை கடத்தி சென்றிருக்க வேண்டும் எனக்கருதிய தொழிலாளி இது பற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

போலீசில் அளித்த புகாரில் வீட்டுக்கு வந்து சென்ற நண்பர், தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து மனைவியை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

மார்த்தாண்டம் போலீசார் இது பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாயமான பெண், ராஜாக்கமங்கலம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு கணவரின் நண்பருடன் குடும்பம் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ராஜாக்கமங்கலம் சென்ற போலீசார் அங்கு வாடைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் பிடித்தனர். பின்னர் அவர்களை மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

இது பற்றி பெண்ணின் கணவருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து சென்றனர். அங்கு பெண்ணிடமும், அவரது கள்ளக்காதலனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு அறிவுரையும் கூறினர்.

அப்போது அந்த பெண்ணின் குழந்தைகளும் தங்களுடன் வருமாறு அழைத்தனர். குழந்தைகளின் அழுகையை கண்டு மனம் மாறிய பெண், கணவருடன் செல்ல தயாரானார்.

குழந்தை களின் நலன் கருதி இனியாவது ஒழுங்காக இருக்குமாறு பெண்ணுக்கு அறிவுரை கூறி போலீசார்அவரை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில் கோட்டாரில் நேற்றுதான் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. ஆட்டோ டிரைவர் ஒருவர் கள்ளக்காதலிக்காக ஆட்டோவை விற்று அவருடன் ஓட்டம் பிடித்தார்.

இதில் இருவருமே திருமணம் ஆனவர்கள். கள்ளக்காதலுக்காக குடும்பத்தை மறந்து ஓடிப்போன இச்சம்பவங்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News